சினிமா வரலாற்றில் யாருமே செய்யாத முயற்சியில் 'விஜய் ஆண்டனி'!

E-mail Print PDF
User Rating: / 4
PoorBest 

தமிழ் இசையமைப்பாளர்களில் இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய முயற்சியினை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள கவிஞர்களில் சிறந்த கவிஞர் ஒருவரை தேர்வு செய்து, அவரை தன்னுடைய 'நான்' படத்தின் பாடலாசிரியராக அறிமுகப்படுத்த உள்ளார். ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, முதன்முறையாக ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் படம் 'நான்'. விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷனும், ஏ.வி.ஆர். டாக்கீஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி, ஒளிப்பதிவும் செய்து இயக்கவும் செய்கிறார் புதுமுகம் ஜீவா சங்கர். இவர் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது 'நான்' படத்தின் ஷூட்டிங் முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பாடல்களுக்கு புதிய வடிவம் கொடுக்கும் நோக்கில் வெளிநாட்டிலிருந்து இசை வல்லுநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைத்து பாடல்களை உருவாக்கி வருகிறார் விஜய் ஆண்டனி. இந்நிலையில் மற்றொரு சிறப்பு அம்சமாக புதிய கவிஞர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில், சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத ஒரு புதிய முயற்சியில் இறங்குகிறார் விஜய் ஆண்டனி.

இதுபற்றி அவர் அளித்த பேட்டி வருமாறு, "நான் இசையமைப்பாளராக அறிமுகமான பிறகு, இதுவரை 40க்கும் மேற்பட்ட பாடகர்களையும், ப்ரியன், அண்ணாமலை உள்ளிட்ட சில பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளேன். இப்போது 'நான்' படத்தில் நடிகராகவும் நான் அறிமுகமாகிறேன். என்னுடைய கல்லூரி நண்பர் ஜீவா சங்கர் இயக்கும் இப்படத்தில், புதுசா ஏதாவது செய்யணுமே என்ற எண்ணம் வந்தது. அப்போதுதான் புதிய கவிஞரை தேர்வு செய்து பாடலாசிரியராக அறிமுகப்படுத்தும் யோசனை தோன்றியது. பொதுவாக எல்லா கவிஞர்களுக்கும், இசையமைப்பாளர்கள் தத் தத் கரத்தில்தான் மெட்டுக்களை வழங்குவார்கள். அதன்படி 'நான்' படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கான மெட்டை www.vijayantony.com என்ற எனது இணையதளத்தில் கொடுத்துள்ளேன். என்னிடம் ஏற்கனவே வாய்ப்பு கேட்டு வந்த, அல்லது என்னை சந்திக்கமுடியாமல் போனவர்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள ஆர்வமுள்ள, வாய்ப்பு தேடுகின்ற கவிஞர்கள் அந்த மெட்டை கேட்டு அதற்கேற்ற வரிகளை எழுதி அனுப்பலாம்.

'தப்பெல்லாம் தப்பே இல்லை
சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியா செய்தால் தப்பே இல்லை...' என்பதுதான் பாடலுக்கான கரு. இதுதான் பாடலின் தற்காலிக பல்லவியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கான்செப்டிற்கு சிறந்த வரிகளை எழுதும் பத்து கவிஞர்களை எனது ஸ்டூடியோவுக்கு வரவழைத்து அவர்களில் அந்த பாடலுக்கான சூழ்நிலைக்கு பொருத்தமாக யார் எழுதுகிறாரோ அவரை 'நான்' படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்துவேன். எனது இந்த முயற்சி அடுத்தடுத்த படங்களிலும் தொடரும். வரும் 31-12-2011-க்குள்ளாக பாடல்களை எழுதி அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்பட்ட பாடலாசிரியர் யார் என்ற விபரம் ஜனவரி 2-ந்தேதியில் அறிவிக்கப்படும்." என்றார். புது முயற்சியை வாழ்த்தி வரவேற்கிறோம்!

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com